ராசி மண்டலத்தில் இடம்பெற்றுள்ள எட்டாவது ராசி விருச்சிகம். விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய்.
விருச்சிக ராசிக்கு குருவும், சூரியனும் நட்பு கிரகங்கள். சந்திரன், சனி, புதன் ஆகியவை பகை கிரகங்கள்.
ஆகவே, நட்பு கிரகங்களின் காரகத்துவம் உள்ள பொருட்கள், நிறங்கள், இடங்கள் போன்றவை நன்மை பயக்கும். பகை கிரகங்களின் காரகத்துவங்கள் நன்மை அளிக்காது.
அதன்படி, குருவுக்கு உரிய மஞ்சள், சூரியனுக்கு உரிய ஆரஞ்சு நிறங்கள் நன்மை அளிக்கும். சனிக்கு உரிய நீலமும் புதனுக்கு உரிய பச்சையும், சந்திரனுக்கு உரிய வெள்ளையும் நன்மை அளிக்காது.
ஆகவே, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறத்தில் உள்ள ஆடைகள் மற்றும் கைக்குட்டைகளை பயன்படுத்துவது நல்லது.
நீலம், வெள்ளை மற்றும் பச்சை நிற ஆடைகள் மற்றும் கைக்குட்டைகளை தவிர்ப்பது நல்லது.
தடைகள் மற்றும் இடையூறுகள் அகல, வெள்ளை, பச்சை மற்றும் நீல நிறத்தில் உள்ள அரையடி நீள ரிப்பன்களை எடுத்து, திங்கள், புதன் அல்லது சனிக்கிழமைகளில், கத்தரிக்கோலால் துண்டு துண்டாக வெட்டிப் போடலாம்.
அதேபோல், பச்சரிசி, பச்சை பயறு மற்றும் எள் ஆகியவற்றை கொஞ்சம் எடுத்து, திங்கள், புதன் அல்லது சனிக்கிழமைகளில் ஒரு கல்லில் வைத்து இடித்து போடலாம்.
மேலும், சந்திரன், புதன் மற்றும் சனி ஆதிக்கம் நிறைந்த கோயில்களுக்கு அடிக்கடி செல்வதை தவிர்க்க வேண்டும்.
இவை அனைத்தும் அனுபவம் நிறைந்த ஜோதிடர்கள் கண்டறிந்த எளிய பரிகார முறைகள் ஆகும்.
வடஇந்தியாவின் மிகப்பழமையான லால் கிதாப் என்ற சிவப்பு நூல் விருச்சிக ராசிக்கு கூறும் பரிகாரங்கள் சிலவற்றை பார்ப்போம்.
மண் பத்திரங்களில் தேன் அல்லது குங்குமத்தை வைத்திருப்பது நல்லது.
செவ்வாய் கிழமைகளில் விரதம் இருப்பதுடன், அரச மரம் மற்றும் முள் செடிகளை வெட்டுதல் கூடாது.
பால் காய்ச்சும்போது பொங்கி வடியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மற்றவர்களிடம் இருந்து தானமாக எதையும் பெறக்கூடாது.
செவ்வாய் கிழமைகளில் தேன், குங்குமம் மற்றும் சிவப்பு ரோஜாக்களை ஓடும் நீர் அல்லது கடலில் விட துரதிர்ஷ்டங்கள் நீங்கும்.
செவ்வாய் கிழமையன்று இஷ்ட தெய்வத்திற்கு சிவப்பு பூந்தி படைத்து வழிபடுவது நல்லது.
அனுமனுக்கு செந்தூரம் மற்றும் வஸ்திரம் சாத்தி வழிபட கடன் மற்றும் வறுமை நீங்கும். நோய்களும் அகலும்.
அடுத்து விருச்சிக ராசி மற்றும் லக்னத்திற்கு, செவ்வாய்க்கு உரிய பவழமும், குருவுக்கு உரிய கனக புஷ்பராகமும், சூரியனுக்கு உரிய மாணிக்கமும் உகந்த ரத்தினங்கள் ஆகும்.
ராசிக்கற்களை அணியும்போது, அனுபவம் நிறைந்த ஜோதிடர்களின் ஆலோசனைப்படியே அணிய வேண்டும். அதுவும் குறை இல்லாத ரத்தினங்களையே அணிய வேண்டும்.
அவரவருக்கு நடக்கும் தசா புத்திகள் மற்றும் கோச்சார கிரக நிலைகள் காரணமாக, பலன்கள் சாதகமாகவே அல்லது பாதகமாகவோ இருக்கலாம்.
இருந்தாலும், மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்களை அகற்றி நேர்மறை எண்ணங்களை வளர்ப்பது அனைவருக்கும் நன்மை தரும். அதுவே, விதியை மதியால் வெல்லும் ரகசியம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக