ராசி மண்டலத்தில் இடம்பெற்றுள்ள ஐந்தாவது ராசி சிம்மம். சிம்ம ராசியின் அதிபதி சூரியன்.
சிம்மத்திற்கு, புதன் மற்றும் குரு நட்பு கிரகங்கள், செவ்வாய் மற்றும் சனி பகை கிரகங்கள் ஆகும்.
ஆகவே, நட்பு கிரகங்களின் காரகத்துவம் உள்ள பொருட்கள், நிறங்கள், இடங்கள் போன்றவை நன்மை பயக்கும். பகை கிரகங்களின் காரகத்துவங்கள் நன்மை அளிக்காது.
அதன்படி, குருவுக்குரிய மஞ்சள், புதனுக்குரிய பச்சை நிறங்களில் ஆடைகள் மற்றும் கைக்குட்டைகளை பயன்படுத்துவது
செவ்வாய்க்கு உரிய சிவப்பு மற்றும் சனிக்கு உரிய நீல நிற ஆடைகள் மற்றும் கைக்குட்டைகளை தவிர்ப்பது நல்லது.
தடைகள் மற்றும் இடையூறுகள் அகல, சிவப்பு மற்றும் நீல நிறத்தில் உள்ள அரையடி நீள ரிப்பன்களை எடுத்து, செவ்வாய் அல்லது சனிக்கிழமைகளில், கத்தரிக்கோலால் துண்டு துண்டாக வெட்டிப் போடலாம்.
அதேபோல், துவரை மற்றும் எள் ஆகியவற்றை கொஞ்சம் எடுத்து, செவ்வாய் அல்லது சனிக்கிழமைகளில் ஒரு கல்லில் வைத்து இடித்து போடலாம்.
மேலும், செவ்வாய் மற்றும் சனி ஆதிக்கம் நிறைந்த கோயில்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.
இவை அனைத்தும் அனுபவம் நிறைந்த ஜோதிடர்கள் கண்டறிந்த எளிய பரிகார முறைகள் ஆகும்.
லால் கிதாப் என்ற சிவப்பு நூல், சிம்ம ராசிக்கு கூறும் பரிகாரங்கள் சிலவற்றை பார்ப்போம்.
கண் பார்வையற்றவர்களுக்கு ஞாயிற்று கிழமைகளில் இனிப்பு வழங்குவது செல்வ நிலையை ஏற்படுத்தி தரும்.
உங்கள் பொருளாதார நிலைக்கு ஏற்ப, அன்னதானம் செய்பவர்களுக்கு அரிசி, பால் போன்றவற்றை வாங்கி கொடுப்பது நல்லது.
மற்றவர்களுக்கு செய்த உதவியையும், கொடுத்த கடனையும் வெளியில் சொல்லி திரிவது, தரித்திர நிலையை ஏற்படுத்தும் என்றும் லால் கிதாப் கூறுகிறது.
மது மற்றும் மாமிசத்தை தவிர்க்க வேண்டும் என்றும் லால் கிதாப் கூறுகிறது. அரசன் அனைத்து உயிர்களையும் காப்பதற்கு கடமைப்பட்டவன் என்பதால் அவ்வாறு கூறப்பட்டிருக்கலாம்.
ஏழு வகை தானியங்களை வாங்கி அதை ஒரு துணியில் முடிந்து, தலையில் வைத்து உறங்க வேண்டும். காலையில் எழுந்த பின்னர், அதை, எறும்பு போன்ற சிறு உயிரினங்களுக்கு போட வேண்டும். அவ்வாறு செய்தால், சமூகத்தில் நல்ல அந்தஸ்து கிடைக்கும் என்றும் லால் கிதாப் கூறுகிறது.
பொய் பேசுவதையும், மற்றவர்கள் மீது குற்றம் காண்பதையும் தவிர்த்து, கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற வேண்டும் என்றும் லால்கிதாப் கூறுகிறது.
அடுத்து, சிம்ம ராசி மற்றும் சிம்ம லக்னத்திற்கு, சூரியனுக்கு உரிய மாணிக்கமும், புதனுக்குரிய மரகதமும், குருவுக்கு உரிய கனக புஷ்பராகமும் உகந்த ரத்தினங்களாகும்.
ராசிக்கற்களை அணியும்போது, அனுபவம் நிறைந்த ஜோதிடர்களின் ஆலோசனைப்படி, குறை இல்லாத ரத்தினங்களை தேர்வு செய்து அணிய வேண்டும்.
ஒவ்வொருவரின் தனிப்பட்ட ஜாதகம் மற்றும் தசா புத்திகளை பொறுத்து, அவர்களுக்கு சாதகமான பலன்களோ அல்லது பாதகமான பலன்களோ நடக்கலாம்.
இருந்தாலும், மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்களை அகற்றி நேர்மறை எண்ணங்களை வளர்ப்பது அனைவருக்கும் நன்மை தரும். அதுவே, விதியை மதியால் வெல்லும் ரகசியம்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக