ராசி மண்டலத்தில் இடம்பெற்றுள்ள முதல் ராசி மேஷம். மேஷ ராசியின் அதிபதி செவ்வாய்.
மேஷத்திற்கு சூரியன், சந்திரன், குரு ஆகியவை நட்பு கிரகங்கள். சுக்கிரன், புதன், சனி ஆகியவை பகை கிரகங்கள்.
நட்பு கிரகங்களின் காரகத்துவம் உள்ள பொருட்கள், நிறங்கள், இடங்கள் போன்றவை நன்மை பயக்கும். பகை கிரகங்களின் காரகத்துவங்கள் நன்மை அளிக்காது.
அதன்படி, சந்திரனுக்குரிய வெண்மை, குருவுக்குரிய மஞ்சள், சூரியனுக்கு உரிய ஆரஞ்சு நிறங்களில் ஆடைகள் மற்றும் கைக்குட்டைகளை பயன்படுத்தலாம்.
அதேபோல், புதனுக்கு உரிய பச்சை, சுக்கிரனுக்கு உரிய பிங்க், சனிக்கு உரிய நீல நிற ஆடைகள் மற்றும் கைக்குட்டைகளை தவிர்க்கலாம்.
தடைகள் மற்றும் இடையூறுகளை அகற்ற, பச்சை, பிங்க் மற்றும் நீல நிறங்களில் உள்ள அரையடி நீல ரிப்பன்களை எடுத்துக்கொண்டு, புதன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில், அவற்றை கத்தரிக்கோலால் துண்டு, துண்டாக வெட்டிப் போடலாம்.
அதேபோல், பச்சை பயறு, மொச்சை, எள் ஆகியவற்றை, மேற்கண்ட நாட்களில் ஒரு கல்லில் வைத்து இடித்து போடலாம்.
இவை அனைத்தும் அனுபவம் நிறைந்த ஜோதிடர்கள் கண்டறிந்த எளிய பரிகார முறைகள் ஆகும்.
மேஷ ராசி மற்றும் மேஷ லக்னத்தில் பிறந்தவர்கள், புதன், சுக்கிரன் மற்றும் சனியின் ஆதிக்கம் நிறைந்த கோயில்களுக்கு செல்வதை தவிர்க்கலாம்.
இதுதவிர, வடஇந்தியாவின் பழங்கால ஜோதிட நூலான லால் கிதாப் என்னும் சிவப்பு புத்தகத்தில், மேஷ ராசிக்கு சொல்லப்பட்டுள்ள பரிகாரங்களை பார்ப்போம்.
மேஷ ராசிக்காரர்கள், வீட்டில் எலுமிச்சை செடி வளர்க்கக் கூடாது என்று லால் கிதாப்பில் கூறப்பட்டுள்ளது.
எலுமிச்சை பழத்தின் ருசியானது சுக்கிரனின் காரகத்துவமான, புளிப்பு சுவையை கொண்டிருப்பதால் அப்படி கூறி இருக்கலாம்.
மேலும், தாயார் மற்றும் ஆன்மீக பெரியவர்களுக்கு முடிந்த வரையில் உதவி செய்ய வேண்டும்.
அதேபோல், இரவு உறங்கும்போது, தலைமாட்டில் ஒரு சொம்பில் நீரை வைத்துக்கொண்டு உறங்க வேண்டும்.
விடிந்த பின்னர், அந்த நீரை ஏதேனும் ஒரு செடிக்கு தொடர்ந்து ஊற்றி வரவேண்டும் என்றும் லால் கிதாப் கூறுகிறது.
அடுத்து, மேஷ ராசிக்காண ராசிக்கற்களை பற்றி பார்ப்போம்.
செவ்வாய்க்கு உரிய பவழம், சூரியனுக்கு உரிய மாணிக்கம், குருவுக்கு உரிய கனக புஷ்பராகம், சந்திரனுக்கு உரிய முத்து ஆகியவை, மேஷ ராசிக்கு உகந்த ரத்தினங்கள் ஆகும்.
ராசிக்கற்கள் அணியும் போது அனுபவம் நிறைந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி, குறை இல்லாத ரத்தினங்களை தேர்ந்தெடுத்து அணிவது அவசியமாகும்.
யோகங்களும், தோஷங்களும் இணைந்ததுதான் ஜாதகம். அதேபோல், நடக்கும் தசா புத்திகள், கோச்சார கிரக நிலைகள் போன்றவற்றுக்கு ஏற்ப, ஒவ்வொருவருக்கும் நடக்கும் பலன்கள் மாறுபடும்.
எனவே, மனதில் உள்ள எதிர்மறை சிந்தனைகளை அகற்றி, பாசிடிவ் சிந்தனைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். இதுதான் விதியை மதியால் வெல்லும் ரகசியம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக